மேலும்

சிறிலங்காவில் நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தம் – அமெரிக்காவின் புதிய தூதுவர்

சிறிலங்காவில், நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளது என்று, சிறிலங்காவுக்கான தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள, அலெய்னா ரெப்லிட்ஸ்  தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால், சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான தூதுவராகப் பெயரிடப்பட்டுள்ள, அலெய்னா ரெப்லிட்ஸ் கடந்த ஜூன் 28ஆம் நாள், வெளிநாட்டு உறவுகளுக்கான அமெரிக்க செனட் குழுவின் நேர்முகத் தேர்வுக்காக முன்னிலையானார்.

அப்போது  உரையாற்றிய அவர்,

‘2015இல் சிறிலங்கா வாக்காளர்கள், ஊழல், முரண்பாடு, அடக்குமுறைகளை நிராகரித்து, மறுசீரமைப்பு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளித்தனர்.

எனினும், சிறிலங்காவில், நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், மிகவும் வலியைத் தரக் கூடியதாக இருந்ததுடன், இனங்களுக்கிடையிலான, மதங்களுக்கிடையிலான பிளவுகளை சீரமைக்கும் பணிகள் இன்னமும் முழுமையடையவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் பரந்துபட்ட பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் சிறிலங்காவும், மாலைதீவும் முக்கியமானவை.

ஹோர்மூஸ் நீரிணையையும், மலாக்கா நீரிணையையும் இணைக்கும் முக்கியமான கப்பல் பாதையில் இந்த இரண்டு நாடுகளும் அமைந்திருக்கின்றன.

இந்த வழியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, அமெரிக்காவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு மிகவும் முக்கியமானது.

ஒவ்வொரு நாட்டினதும் பொருளாதார மற்றும் வணிக வாய்ப்புகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக ஒழுங்கின் கீழ் அவர்களுடன் பணியாற்றுவது முக்கியமானது,

கடந்த காலத்தில் தனது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், நீதியை நிலைநாட்டுவது, பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள், அமைதியான, செழிப்பான எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான  சிறிலங்காவின் முயற்சிகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

பிராந்திய உறுதிப்பாட்டுக்கு அதிக பங்களிப்பை வழங்குவதற்கான சிறிலங்காவின் திறனை வளர்ப்பதற்கும், அதன் சொந்த இறைமை மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும் கூட நாங்கள், ஆதரவு அளிக்கிறோம்.

இந்த முயற்சியில் சிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும். திறந்த இந்தோ- பசுபிக் கண்ணோட்டத்துக்கு பங்களிப்பை வழங்கும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *