மேலும்

16 பேர் அணியில் பிளவு – 10 பேர் கூட்டு எதிரணியில் இணைகின்றனர்

கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அணியில் உள்ள 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் எதிர்வரும் ஜூலை 3ஆம் நாள் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில், கூட்டு எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் அடுத்த வாரம் நடக்கும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்பர் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏனைய ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டு எதிரணிக்கு அழைத்து வரும் முயற்சிகளிலும், இந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பதவிகளைக் கொண்டுள்ளவர்களை தம்முடன் இணைத்துக் கொள்ள முடியாது என்று கூட்டு எதிரணி நிபந்தனை விதித்திருந்தது.

அத்துடன், குழுவாக வருபவர்களை ஏற்க முடியாது என்றும் தனித்தனியாக வந்து தம்முடன் இணைந்து கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது.

எனினும், தாம் சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என்று 16 பேர் அணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜெயந்த நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, 16 பேர் அணியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்சவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *