அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளை பீட அதிகாரிகள் சிறிலங்காவில்
அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
பசுபிக் கட்டளைப் பீடத்தின், மூலோபாயத் திட்டமிடல் மற்றும் கொள்கைப் பிரிவு பிரதிப் பணிப்பாளரான பிரிகேடியர் ஜெனரல் மார்க் கில்லெட் தலைமையிலான நான்கு அதிகாரிகளைக் கொண்ட குழுவே சிறிலங்கா வந்திருந்தது.
இந்தக் குழுவினர், கடந்த 14ஆம் நாள் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
இந்தச் சந்திப்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதன்போது, 20209இல் கண்ணிவெடிகளற்ற நாட்டை உருவாக்கும் திட்டத்தை துரிதமாக நிறைவேற்றும் வகையில், பிராந்திய கண்ணிவெடி அகற்றும் மையத்தை உருவாக்குவதற்கான ஆதரவை வழங்குவது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
‘பாதுகாப்பு ஒத்துழைப்பு – எதிர்கால ஈடுபாடு’ என்ற தொனிப்பொருளின் கீழ், சிறிலங்கா இராணுவத்தினருக்கான முழுமையான பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதாகவும் அமெரிக்க குழுவினர் உறுதி அளித்துள்ளனர்.
ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் பங்கேற்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறிலங்கா விமானப்படை தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதியையும், பிரிகேடியர் ஜெனரல் மார்க் கில்லெட் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.