மைத்திரி- ரணில் சந்திப்பில் சூடான வாக்குவாதம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போது, சூடான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர், நேற்று முன்தினம் சிறிலங்கா அதிபருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஐதேக அமைச்சர்கள் சிலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று ஐதேக தரப்பு, சிறிலங்கா அதிபரிடம் வலியுறுத்தியது. எனினும் அந்தக் கோரிக்கையை ஏற்க சிறிலங்கா அதிபர் மறுத்து விட்டார்.
இதனால், இருதரப்புக்கும் இடையில் சூடான வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் பின்னர் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தம்மைச் சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தினார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கூறியிருந்தார்.