முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டிக்கிறார் ஐ.நா உதவிச்செயலர்
சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் கண்டித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வணிகங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன், வன்முறைகளில் ஈடுபட்ட, வெறுப்புணர்வு கருத்துக்களை வெளியிட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துமாறும், அவர் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
சிறிலங்காவின் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் பெல்ட்மனைச் சந்தித்த போது, சிறிலங்காவில் சட்டம் ஒழுங்கு மீறப்பட்டதையும், முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் வாணிபங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களையும் கண்டித்துள்ளார் என்று ஐ.நா அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இதுபோன்ற சம்பவங்கள் மீள நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், சட்டத்தின் ஆட்சியை பாகுபாடு இன்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.