பிரிகேடியர் பிரியங்கவை சிறிலங்காவுக்கு திருப்பி அழைக்க பிரித்தானியா 2 வாரகாலக்கெடு?
லண்டனில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, இரண்டுவார காலத்துக்குள் திருப்பி அழைக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய அரச அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரணைகளை ஆரம்பிக்குமாறு லண்டன் பெருநகர காவல்துறையிடமும், பிரித்தானிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவிடம் லண்டன் பெருநகர காவல்துறை விசாரணைகளை மேற்கொள்வதற்கு, அவருக்குள்ள இராஜதந்திர விலக்குரிமை தடையாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிகேடியர் பிரியங்கவிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக, அவருக்கு பிரித்தானிய அளித்துள்ள இராஜதந்திர விலக்குரிமையை நீக்க வேண்டியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பாதுகாப்பு ஆலோசகர் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.