மண்டைதீவில் அனைத்துலக துடுப்பாட்ட மைதானம்?- கைவிடப்பட்டது ஆனையிறவு
யாழ்ப்பாணத்தில் அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா துடுப்பாட்ட சபையின் தலைவரான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் உள்ள, மண்டைதீவில் அனைத்துலக தரம் வாய்ந்த துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 50 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை தாம் ஆய்வு செய்ததாக அவர் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் அனைத்துலக துடுப்பாட்ட மைதானங்கள் அனைத்தும் நாட்டின் தென், மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலேயே உள்ளன.
தமிழர்களின் கலாசார தலைநகர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம், நீண்ட துடுப்பாட்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்ற போதிலும், 1970களில் தொடங்கிய உள்நாட்டுப் போரினால் வடக்கில் எந்தவொரு அனைத்துலக தரம் வாய்ந்த மைதானங்களும் அமைக்கப்படவில்லை.
இந்த நிலையிலேயே தற்போது மண்டைதீவில் அனைத்துலக தரம்வாய்ந்த மைதானத்தை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முன்னதாக, ஆனையிறவை அண்டியுள்ள பகுதிகளில் அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தரப்பில் இருந்து செய்திகள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.