இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலர் சிறிலங்கா மீது கவனம் செலுத்துவார் – பிரிஐ
சிறிலங்காவுடனான உறவுகளை முன்னேற்றுவது தொடர்பாக, இந்திய வெளிவிவகாரச் செயலராகப் பதவியேற்றுள்ள விஜய் கேசவ் கோகலே கவனம் செலுத்துவார் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
சீன மற்றும் கிழக்காசிய விவகாரங்களில் அனுபவம் வாய்ந்த இராஜதந்திரியான, விஜய் கேசவ் கோகலே நேற்று இந்திய வெளிவிவகாரச் செயலராக பதவியேற்றார். அடுத்த இரண்டு ஆண்டுக்கு அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் புதிய பதவியை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக, இந்திய வெளிவிவகார அமைச்சில், பொருளாதார உறவுகளுக்கான செயலராகப் பணியாற்றியிருந்தார்.
இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராக பொறுப்பேற்றுள்ள விஜய் கோகலே, சிறிலங்கா, நேபாளம், மாலைதீவுகள், மியான்மார் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான உறவுகளை முன்னேற்றுவது, உள்ளிட்ட பலமுனைச் சவால்களுக்கு முகம் கொடுத்திருக்கிறார் என்று பிரிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நாடுகளில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருவதையும் பிரிஐ சுட்டிக்காட்டியுள்ளது.