நாளைக்கே சுதந்திரக் கட்சி அரசாங்கம் – சிறிலங்கா அதிபர்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 96 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம்முடன் இருந்தால், நாளைக்கே கூட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கத் தயார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைத்தால், தாமும் இணைந்து கொள்ளத் தயார் என்று, புதிய கூட்டணி ஒன்றை அமைத்துள்ளவர்கள் கூறியிருக்கிறார்கள்.
நான் அவர்களுக்குக் கூறுகிறேன், 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றாக வந்து என்னுடன் நில்லுங்கள்.
நாளைக்கே நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கிறேன்.
நாளை காலையே எனது இல்லத்துக்கு வாருங்கள். 96 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எவ்வாறு ஒரு அரசாங்கத்தை அமைப்பது என்று உங்களுக்கு காண்பிக்கிறேன்.
மிகின் லங்கா, சிறிலங்கன் விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு அடுத்தவாரம் நியமிக்கப்படும்.
அதன் மூலம் மோசடிகளுடன் தொடர்புடைய அனைவரும் அம்பலப்படுத்தப்படுவார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.