சிவசக்தி ஆனந்தனின் குற்றச்சாட்டை விசாரிக்காவிடின் வழக்குத் தொடர்வோம் – மகிந்த அணி சூளுரை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா பிரதமரின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தலா 2 கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி அனந்தன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆதரவு, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில்,
“வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கியதற்காக கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 2 கோடி ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி அனந்தன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இலஞ்ச ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டும். அல்லது இதுகுறித்து சிறிலங்கா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால், கூட்டு எதிரணி வழக்குத் தாக்கல் செய்யும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.