வேட்புமனுக்கள் நிராகரிப்புக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றினால் தள்ளுபடி
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேலும் ஐந்து மனுக்களை சிறிலங்கா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாணந்துறை, அகலவத்தை, மகியங்கனை, திறப்பனை, வெலிகம ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட தமது மனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, சிறிலங்கா பொது ஜன முன்னணி உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்களை நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நீதியரசர்கள் புவனேக அலுவிகார, கே.ரி.சித்ரசிறி, விஜித் கே.மலலகொட ஆகியோரைக் கொண்ட அமர்வு, இந்த மனுக்கள் சட்டரீதியாக அடிப்படையற்றவை என்று கூறி தள்ளுபடி செய்தது.
ஏற்கனவே, சிறிலங்கா பொதுஜன முன்னணியின், மகரகம நகரசபை வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவும் உச்சநீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.