இன்று கொழும்பு வருகிறார் சிங்கப்பூர் பிரதமர் – சுதந்திர வர்த்தக உடன்பாடு கைச்சாத்து
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே சிங்கப்பூர் பிரதமர் இன்று கொழும்புக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு நாளை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் அணிவகுப்பு மரியாதை, அளிக்கப்பட்டு, பீரங்கிக் குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்படும்.
அதையடுத்து, சிறிலங்கா அதிபருடன் அதிகாரபூர்வ பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.
இருதரப்புப் பேச்சுக்களின் பின்னர், சிங்கப்பூருக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்பாடும் கையெழுத்திடப்படவுள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
13 ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்கப்பூர் பிரதமர் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.