தேர்தலுக்குப் பின் மகிந்தவின் கட்சி அழிந்து விடும் – தயாசிறி ஜெயசேகர
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுபடுத்தும் முயற்சிகளை நாமல் ராஜபக்சவும், பிரசன்ன ரணதுங்கவுமே சீர்குலைத்ததாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் மகிந்தவின் கட்சி அழிந்து போய் விடும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
“சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுபடுத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட முயற்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்சவும், பிரசன்ன ரணதுங்கவுமே சீர்குலைத்தனர்.
சிறிலங்கா பொதுஜன முன்னணியில் உள்ள பெரும்பாலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவே விரும்பினர். ஆனால் அது தடுக்கப்பட்டது.
உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி முற்றாகவே அழிந்து விடும்” என்றும் அவர் தெரிவித்தார்.