93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவு
93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் முடிவடையவுள்ளது. முதற்கட்டமாக, வேட்புமனுக் கோரப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை இன்று நண்பரல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இந்த 93 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை நேற்றுடன் நிறைவடைந்தது.
நேற்று நண்பகல் வரை 557 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
பல இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் நேற்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன.
இன்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடையும். அதன் பின்னர், வேட்புமனுக்கள் தொடர்பான எதிர்ப்புக்களை தாக்கல் செய்வதற்கு ஒரு மணிநேர அவகாசம் அளிக்கப்படும்.
வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த பின்னர் இன்று மதியம், தேர்தல் நாள் அறிவிக்கப்படும் என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் சிறிரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எஞ்சிய 248 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் டிசெம்பர் 18ஆம் நாள் தொடக்கம், 21ஆம் நாள் நண்பகல் 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.