மேலும்

புலிகளுடனான போர் மிகச்சிறந்த படிப்பினை – இந்திய அமைதிப்படையின் முன்னாள் தளபதி

Lt Gen Depinder Singhவிடுதலைப் புலிகளுக்கு எதிரான ‘ஒப்பரேசன் பவான்’ நடவடிக்கை இந்திய இராணுவத்துக்கு மிகச்சிறந்த படிப்பினையாக இருந்தது என்று, இந்திய அமைதிப்படையின் தளபதியாக பணியாற்றிய லெப்.ஜெனரல் திபெந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் இந்திய இராணுவம் நடத்திய இராணுவ இலக்கிய விழாவில், சிறிலங்காவில் இந்தியப் படையினரின் போர் அனுபவங்கள் தொடர்பாக விபரித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த இராணுவ இலக்கிய விழா, கடந்த 7ஆம் நாள் ஆரம்பித்து, 9ஆம் நாள் நிறைவடைந்தது. இந்த நிகழ்வில், கடந்த 8ஆம் நாள், உரையாற்றிய  லெப்.ஜெனரல் திபெந்தர் சிங்,

 

“இந்திய அமைதிப்படை முப்படைகளையும் கொண்டதாகவே உருவாக்கப்பட்டது. இந்திய கடற்படை மற்றும் விமானப்படையின் உயர்மட்டப் பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருந்தது.

ஆனால் காலப்போக்கில், கடற்படை, விமானப்படையின் பங்களிப்பு குறையத் தொடங்கியது.

நாங்கள் ஏன் சென்றோம் என்பது குறித்த தெளிவான அரசியல் நோக்கத்தை இந்திய அரசாங்கம் கொண்டிருக்கவில்லை.

விடுதலைப் புலிகளைப் பாதுகாக்கவா அல்லது சிறிலங்காவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கா?

நான் ஒரு இராணுவ ஆளுனராக சிறிலங்காவுக்குச் சென்றேனா அல்லது இந்திய அமைதிப்படையின் கட்டளைத் தளபதியாக சென்றேனா என்பதில் குழப்பமாக இருந்தது.

Lt Gen Depinder Singh

ஒவ்வொரு சிப்பாயும் போதிய தனிப்பட்ட பயிற்சியின்றியே சென்றனர். அது பலவீனமாக இருந்தது. ஆனால் யாரைக் குற்றம் சொல்வது?

இதனால் 1500 படையினர் கொல்லப்பட்டனர். 3000 பேர் காயமடைந்தனர்.

கடந்த காலங்களில் இது ஒரு நல்ல விடயம். ஒரு பிரதான சக்தி என்ற வகையில், நமது அயலவர்களை எதிர்ப்பதற்கான வலிமையை வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும்.

எனவே எமக்கு முதல் தரமான எதிரியுடன் போரில் ஈடுபட வேண்டிய தேவை உள்ளது.

‘ஒப்பரேசன் பவான்’ மிகச் சிறந்த படிப்பினையாக இருந்தது. எனினும், அதிகளவு மனித வளத்தை நாம் இழக்க நேரிட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *