அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் – கூட்டு எதிரணி இரட்டைவேடம்
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை உரிமையை சீன- சிறிலங்கா கூட்டு முயற்சி நிறுவனங்களுக்கு மாற்றும் வகையில் வெளியிடப்பட்ட இரண்டு அரசிதழ் அறிவிப்புகளுக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 85 வீத உரிமையை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் வகையில், அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக குழுமம் மற்றும் அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக சேவைகள் என இரண்டு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டு முயற்சி நிறுவனங்களுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட பங்குரிமை உடன்பாடுகள் தொடர்பான இரண்டு பிரேரணைகள் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழ்கள் தொடர்பான பிரேணையை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, பிரேரணைக்கு ஆதரவாக 72 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
ஜேவிபி உறுப்பினர்கள் ஐந்து பேரும், கூட்டு எதிரணி உறுப்பினர்களான அருந்திக பெர்னான்டோ மற்றும், விஜித பேருகொடவும், பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.
கூட்டு எதிரணியின் தலைவரான தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் இருந்த போதும், அவர் வாக்களிக்கவில்லை.
எதிர்த்து வாக்களித்த உறுப்பினர்களின் பெயர்கள் திரையிடப்பட்ட போது, அதில் தினேஸ் குணவர்த்தனவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.
இதையடுத்து, கூட்டு எதிரணியினர் எதிர்த்து வாக்களிக்க விரும்பவில்லை என்பது வெளிப்பட்டுள்ளதாக அவை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டுக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி கடும் எதிர்ப்பை வெளியிட்டு போராட்டங்களையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.