வரதராஜப்பெருமாளுக்கு மீண்டும் சிறிலங்கா குடியுரிமை
வடக்கு- கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரும், ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணியின் முக்கிய தலைவருமான அண்ணாமலை வரதராஜப்பெருமாளுக்கு மீண்டும் சிறிலங்கா குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வடக்கு- கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த போது, 1990ஆம் ஆண்டு ஈழப்பிரகடனம் செய்து விட்டு, இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற வரதராஜப் பெருமாள், இந்தியக் குடியுரிமையைப் பெற்று அங்கேயே இரகசிய இடத்தில் வசித்து வந்தார்.
அண்மைக்காலமாக மீண்டும் வடக்கு, கிழக்கு அரசியலில் ஆர்வம் காட்டத்தொடங்கிய வரதராஜப் பெருமாள், கடந்த ஆண்டு மீண்டும் சிறிலங்கா குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தார். எனினும், அப்போது அவரது குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று அவருக்கான குடியுரிமை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் தேர்தல் அரசியலில் ஈடுபட அவர் விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது,
வரதராஜப்பெருமாளின் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கூட்டமைப்பில் இணைந்து கொள்ளவதற்கு ஈபிஆர்எல்எவ் வரதர் அணி, ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்து மூலம் விண்ணப்பம் செய்திருந்தது என்றும் அதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.