கோத்தா கைதுக்கு இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு விதித்திருந்த இடைக்காலத் தடை உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் டிசெம்பர் 15ஆம் நாள் வரை நீடித்துள்ளது.
ஏற்கனவே, கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு இன்று வரை தடைவிதித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
தமது பெற்றோருக்கு 90 மில்லியன் ரூபா செலவில் நினைவிடம் அமைப்பதற்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நடத்தப்படும் விசாரணைகளின் ஒரு கட்டமாகவே கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், தம்மைக் கைது செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்தை கோத்தாபய ராஜபக்ச அணுகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.