பெப்வரி 10 இல் உள்ளூராட்சித் தேர்தல்?
வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் நாள் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்படும் என்று, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்துள்ளார்.
வரும் பெப்ரவரி 10ஆம் நாள் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில அமைச்சர்களும் இதனைக் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முகமட்,
”அமைச்சர்கள் சிலர் உள்ளூராட்சித் தேர்தல் பெப்ரவரி 10ஆம் நாள் நடைபெறும் என்று கூறியிருந்தாலும், தேர்தல் ஆணையம் இன்னமும் தேர்தல் நாளைத் தீர்மானிக்கவில்லை.
93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு காலஎல்லை அறிவிக்கப்பட்டுள்ளதில் பிரச்சினை இல்லை.
ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கும் டிசெம்பர் 11 ஆம் நாளுக்கும் 14ஆம் நாளுக்கும் இடையில் வேட்புமனுக்கள் கோரப்படும். அதற்குப் பின்னர் தேர்தல் நாள் அறிவிக்கப்படும்.
தேர்தல் சட்டங்களின்படி, வேட்புமனுக்கள் தாக்கல் நிறைவடைந்து, 5 வாரங்களுக்குக் குறையாமலும், 7 வாரங்களுக்கு மேற்படாமலும் உள்ள காலப்பகுதியில் தேர்தல் நாள் அறிவிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.