களுத்துறைச் சிறையில் டக்ளஸ் மீது தாக்குதல் நடத்திய 6 பேருக்கு கடூழியச் சிறைத்தண்டனை
ஈபிடிபியின் பொதுச்செயலரான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், ஆறு சந்தேக நபர்களுக்கு, தலா பத்தரை ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
களுத்துறைச் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களைப் பார்வையிடச் சென்றிருந்த அப்போதைய அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா மீது, சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
1998ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் 16 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணைகளின் முடிவில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதற்கமைய, 10 சந்தேக நபர்கள் நிரபராதிகள் என்று நீதிபதியினால் விடுவிக்கப்பட்டனர். ஆறு பேர் குற்றவாளிகளாக காணப்பட்டு, தலா பத்தரை ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.