ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் விவாதம் ஆரம்பம் – எதிரணி வரிசையில் முன்னாள் பிரதி அமைச்சர்
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று காலை ஆரம்பமானது.
வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான இன்று தொடக்கம் மூன்று நாட்கள் விவாதம் இடம்பெறவுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கிய விவாதம், மாலை 6.30 மணிவரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல மூன்று நாட்களும் விவாதம் இடம்பெறும்.
இன்று விவாதம் ஆரம்பமான போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், நேற்றிரவு பிரதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டுலீப் விஜேசேகர, எதிர்க்கட்சி வரிசையில் சென்று அமர்ந்து கொண்டார். புதிய அரசியலமைப்பைத் தாம் எதிர்ப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
அதேவேளை, வழிநடத்தல் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நாடாளுமன்றம் முன்பாக கூட்டு எதிரணியினர் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்டோர், பேரணியாகச் செல்ல முற்பட்ட போது, காவல்துறையினர் அவர்களை பொல்துவ சந்தியில் தடுத்து நிறுத்தினர். அதற்கு அப்பாலுள்ள நாடாளுமன்ற வீதி போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.