விசாரணையைத் தவிர்க்கவே உண்ணாவிரதமாம் – அனுராதபுர சிறைக் கண்காணிப்பாளர் அறிக்கை
நீதிமன்ற விசாரணைகளைத் தவிர்க்கவே, அனுராதபுர சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பதாக, சிறைச்சாலை கண்காணிப்பாளர் அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு முதல் நாள் உணவை மறுக்கும் அவர்கள், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், வழக்கமாக உணவை எடுத்துக் கொள்கின்றனர் என்றும் சிறைச்சாலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சட்டமா அதிபர் தரப்பில் நீதிமன்றில் முன்னிலையான அரச சட்டவாளர் குசுன் சரத் சந்திர, மற்றும் மாதவ தென்னக்கோன் ஆகியோர், அனுராதபுர நீதிமன்றில் இருந்து வவுனியா நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக் கோரி வெளியாரின் தூண்டுதலின் பேரிலேயே, மூன்று சந்தேக நபர்களும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நியாயமான அடிப்படையிலேயே, இந்த வழக்கு வவுனியாவில் இருந்து அனுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதாகவும், இதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் காரணமல்ல என்றும், சாட்சிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவே, வழக்கு மாற்றப்பட்டதாகவும், தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு எவருக்கும் அதிருப்தியாக இருந்தால், போராட்டங்களை நடத்துவதை விட்டு விட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிட முடியும் என்றும் அரசசட்டவாளர் குறிப்பிட்டார்
வழக்கை இடமாற்றம் செய்வதற்கு போராட்டங்கள் உதவமாட்டாது என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு டிசெம்பர் 5ஆம் நாளுக்கு பிற்போடப்பட்டுள்ளது.