திருகோணமலையில் தொடரும் சிறிலங்கா- அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி
அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளின் மரைன் படைப்பிரிவுகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் இடம்பெற்று வருகிறது.
Cooperation Afloat Readiness and Training Exercise- 2017, என்ற பெயரில், நேற்றுமுன்தினம் ஆரம்பமாகிய இந்தக் கூட்டுப் பயிற்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து இடம்பெறும்.
இந்தக் கூட்டுப் பயிற்சி கடல் மற்றும் தரை நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இடம்பெற்று வருகிறது.
சிறிலங்கா கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவான சிறப்பு படகுப் படையணி, மற்றும் அண்மையில் உருவாக்கப்பட்ட மரைன் பற்றாலியன் என்பன, அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவுடன் இணைந்து திருகோணமலை தளத்தில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன.
இந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்கு யுஎஸ்என்எஸ் கிளார்க் அன் லூவிஸ் என்ற கப்பலில் அமெரிக்க கடற்படையினர் திருகோணமலை வந்துள்ளனர்.
சிறிலங்கா கடற்படையின் சயுர, சாகர, சயுரால, சுரனிமல ஆகிய போர்க்கப்பல்களும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
அமெரிக்க கடற்படையின் 7 ஆவது பற்றாலியன் கட்டளை அதிகாரியான கொமாண்டர் அன்ட்ரூ குக் இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், இந்தப் பயிற்சிகளில் பிரதானமாக நீருக்கடியிலான வெடிபொருட்கள் மற்றும் நீருக்கு அடியிலான குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படையுடனான கூட்டுப் பயிற்சியில் அமெரிக்க கடற்படையின், அதிரடிக் குழு 75.5, கரையோரக் குழு 1, நீருக்கடியிலான கட்டுமானக் குழு-2, பசுபிக் கப்பல் தீவிரவாத எதிர்ப்பு பாதுகாப்பு அணியை உள்ளடக்கிய மரைன் படைப்பிரிவு என்பன ஈடுபட்டுள்ளன.