இந்தியா அமைக்கும் துறைமுகத்தினால் கொழும்புக்கு அச்சுறுத்தல்
இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்தினால் கொழும்பு துறைமுகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் தலைவர் பராக்கிரம திசநாயக்க எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய அவர், “ கொழும்புத் துறைமுகத்தின் 75 வீதமான வணிகம், இந்தியாவில் இருந்தான பண்டப் பரிமாற்ற போக்குவரத்து மூலமே இடம்பெறுகிறது.
இந்தியாவில் 20.5 மீற்றர் ஆழம் கொண்ட, அதானி கொள்கலன் பரிமாற்ற துறைமுகம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் – 2019 டிசெம்பரில் செயற்படத் தொடங்கும். இது கொழும்பு துறைமுகத்துக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக அமையும்.
காவி ஒருங்கிணைப்பு மற்றொரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், சிங்கப்பூரின் நெப்டியூன் ஒரியன்ட் லைன்ஸ் நிறுவனத்தை, CMA/CGM கையகப்படுத்தியதை அடுத்து, மலேசியாவின் கெலாங் துறைமுகத்தின் 30 வீத கப்பல் போக்குவரத்து, சிங்கப்பூர் துறைமுகத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இந்த மூன்று கூட்டணிகளும் 95 வீதமான பூகோள கப்பல் வணிகத்தைக் கட்டுப்படுத்துகின்றன. 17 பூகோள கப்பல் சேவைகளில் மூன்று மட்டுமே, கொழும்பு துறைமுகத்தை பயன்படுத்துகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.