சிறிலங்காவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்- அமெரிக்க துணை தூதுவர்
சிறிலங்காவில் அமெரிக்க நிறுவனங்கள் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்கு இதுவே சரியான நேரம் என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் உள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக வழிகளில் அமெரிக்க அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவும் சிறிலங்காவும் மிக நெருங்கிய நட்பு நாடுகளாக – கூட்டாளிகளாக மாறவுள்ளன. இதன்மூலம் இன்னும் கூடுதலான வர்த்தகத்தை- இருநாடுகளும் இணைந்து மேற்கொள்ள முடியும்.
அமெரிக்காவின் உதவி வர்த்தகப் பிரதிநிதி மார்க் லின்ஸ்கொட் சிறிலங்கா வந்திருந்த போது, வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான சூழலை முன்னேற்றுவதற்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் கேட்டுள்ளார்.
அதிக வர்த்தகம் மற்றும் முதலீட்டைக் கவருவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது, சிறிலங்கா 2.8 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஆனால், 268 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களைத் தான் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.