மீண்டும் தேசிய சாதனையைப் படைத்தார் வடக்கு வீராங்கனை அனிதா (படங்கள்)
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் என்ற வீராங்கனை சிறிலங்காவின் 43 ஆவது தேசிய விளையாட்டுத் திருவிழாவில், கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
மாத்தறை , கொட்டவில மைதானத்தில் நேற்று சிறிலங்காவின் 43 ஆவது தேசிய விளையாட்டுத் திருவிழா ஆரம்பமானது.
நேற்று நடந்த பெண்களுக்கான கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில், வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய, யாழ். மாவட்ட வீராங்கனையான அனிதா ஜெகதீஸ்வரன், 3.38 மீற்றர் உயரத்தைத் தாண்டி சாதனை படைத்தார்.
சில வாரங்களுக்கு முன்னர், டியகம மைதானத்தில் நடடந்த தேசிய மட்டப் போட்டியில், 3.46 மீற்றர் உயரத்தை தாண்டி ஏற்படுத்திய தனது சாதனையை அவர் இம்முறை முறியடித்தார்.
இந்தச் சாதனை தொடர்பாக கருத்து வெளியிட்ட அனிதா ஜெகதீஸ்வரன்,
“சிறிலங்கா மட்டத்தில் தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும் சிறிய வருத்தம் உள்ளது. எனது இலக்கான 3.5 மீற்றர் உயரத்தை தாண்ட முடியவில்லை. மழையுடன் கூடிய காலநிலை, ஈரலிப்பான நிலம் என்பன, சாதகமாக அமையவில்லை. எனினும், அடுத்த ஆண்டில் சிறந்தமுறையில் திறமையை வெளிப்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.
அனிதா ஜெகதீஸ்வரன், இந்த ஆண்டில் பெண்களுக்கான கோல் ஊன்றிப் பாய்தலில் தேசிய மட்டத்தில் நான்கு தடவைகள் புதிய சாதனைகளை புரிந்துள்ளார். முதலாவது, இரண்டாவது தேசிய ஒத்திகைகளின் போதும், தேசிய மெய்வல்லுனர் போட்டியிலும், தற்போது, 43ஆவது தேசிய விளையாட்டு விழாவிலும் அவர் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
இதற்கிடையே 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில், நேற்றைய போட்டிகளில், மேல் மாகாணம், 90 தங்கம் உள்ளிட்ட 212 பதங்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதையடுத்து, மத்திய, வடமேல், வடமத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்கள் இருக்கின்றன.
வடக்கு மாகாணம், 8 ஆவது இடத்திலும், கிழக்கு மாகாணம் 9 ஆவது (கடைசி) இடத்திலும் உள்ளன. வடக்கு மாகாணத்துக்கு 5 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
கிழக்கு மாகாணத்துக்கு 3 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.