அமெரிக்க இராணுவத் தளபதியைச் சந்தித்தார் சிறிலங்கா இராணுவத் தளபதி
அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் மார்க் ஏ மில்லேயுடன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
தென்கொரியாவின் சியோல் நகரில் நடந்து வரும், பசுபிக் இராணுவத் தளபதிகள் மாநாட்டின் பக்க நிகழ்வாக- நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது போர் அனுபவங்கள் தொடர்பாக இரண்டு நாடுகளின் தளபதிகளும் கலந்துரையாடியுள்ளனர்.
அதேவேளை, அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் கட்டளை தளபதியான ஜெனரல் ரொபேர்ட் புரூக்ஸ் பிரவுனையும், சிறிலங்கா இராணுவத் தளபதி சந்தித்துப் பேசினார். நேற்றுமுன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, கடந்த கால போர் அனுபவங்கள் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த, ஆர்வமுள்ள விவகாரங்கள் தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்பட்டன.