மேலும்

மார்ச்சுக்குள் உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல்கள் – மாறியது ரணிலின் காலக்கெடு

ranilஉள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்கள்  வரும் ஆண்டு மார்ச் 30 ஆம் நாளுக்குள் நடத்தப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்தின் மீது உரையாற்றிய அவர்,

“சிலர் குற்றம்சாட்டுவது போன்று, சட்டங்கள், பிரேரணைகள் மூலம், தேர்தல்களைப் பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்குக் கிடையாது.

மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம், இந்த மாதத்துடன் நிறைவடைகின்றது. அவற்றுக்கான தேர்தல்களும், உள்ளூராட்சித் தேர்தல்களும், மார்ச் 30ஆம் நாளுக்குள் நடத்தப்படும்.

மாகாணசபைகள் அனைத்துக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து நாங்கள் எமது முடிவை மாற்றிக் கொண்டுள்ளோம்.

நாங்கள் கூடிய விரைவில் தேர்தல்களை நடத்துவோம். தேர்தல்களுக்கான நாளை தேர்தல் ஆணைக்குழு தான் தீர்மானிக்கும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவின் கேள்விக்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, உள்ளூராட்சித் தேர்தல் ஜனவரியில் நடத்தப்படும் என்றும், மாகாணசபைத் தேர்தல்களை டிசெம்பரில் நடத்தலாம் என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்திருப்பதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *