தொகுதிவாரி முறையிலேயே மாகாணசபை, நாடாளுமன்ற தேர்தல்கள் – சிறிலங்கா அதிபர் தெரிவிப்பு
வரப்போகும் மாகாணசபைத் தேர்தல்கள் தொகுதிவாரி முறையிலேயே இடம்பெறும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வட மத்திய மாகாணசபையின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே சிறிலங்கா அதிபர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“வரப் போகும் மாகாணசபைத் தேர்தல்கள் மாத்திரமன்றி, நாடாளுமன்றத் தேர்தலும், தொகுதிவாரி முறையிலேயே நடத்தப்படும்.
புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக விருப்பு வாக்கு முறைக்குப் பதிலாக, வட்டாரமுறையை அறிமுகப்படுத்துவதாக, 2015 அதிபர் தேர்தல் அறிக்கையில் முன்மொழிந்திருந்தேன்.
விருப்பு வாக்கு முறையால், அரசியல்வாதிகள் தம்மை பற்றியே சிந்திக்கிறார்கள். நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ சிந்திப்பதில்லை.
புதிய தேர்தல் முறை நாட்டுக்காக பணியாற்றுவதற்கு அரசியல்வாதிகளைத் தூண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.