குச்சவெளியில் நடந்த நீர்க்காகம் போர்ப்பயிற்சி – சிறிலங்கா அதிபர் பங்கேற்கவில்லை
விமானப்படை, கடற்படையினரின் பங்களிப்புடன், சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தும் நீர்க்காகம் போர்ப் பயிற்சி நேற்று திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெற்றது.
இதில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த போர்ப்பயிற்சியை சிறிலங்கா அதிபர் நேரில் பார்வையிடுவார் என்று பாதுகாப்பு வட்டாரங்களில் நம்பிக்கை வெளியிடப்பட்ட போதிலும், மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. காணொளித் தொடர்பு வழியாகவே அவர் உரையாற்றியிருந்தார்.
இந்த கூட்டுப் பயிற்சியை, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, இராணுவ, கடற்படை, விமானப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.
இந்தப் போர்ப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையின் போர்க்கப்பல்கள், தாக்குதல் படகுகள், தரையிறங்கு கலங்கள், கரையோர ரோந்துப் படகுகள் பங்கேற்றன.
விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள், உலங்குவானூர்திகளும், சிறிலங்கா இராணுவத்தின் கனரக வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.
கடல் வழியாகவும் வான்வழியாகவும் தரையிறக்கப்பட்ட படையினரை, எதிரிப்படைகளின் முகாமை தாக்கியழிக்கும் சண்டைகள் நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டன.
இதில் 13 நாடுகளைச் சேர்ந்த 69 படை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.