சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்தார் மகிந்த
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த கோரிக்கையை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்து விட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்த ராஜபக்சவுக்கும், இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. உதவியாளர்கள் எவரும் இன்றி இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது, மகிந்த ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.
எனினும், சம்பந்தனின் வேண்டுகோளை மகிந்த ராஜபக்ச அமைதியாக நிராகரித்து விட்டார் என்று கூட்டு எதிரணியைச் சேர்ந்த உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும், இந்த விவகாரத்தை கூட்டு எதிரணியின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பு யோசனைகள் குறித்து கூட்டு எதிரணி அறியவில்லை. அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக 14 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தன்னையும் தனது குடும்பத்தினரையும் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும், சம்பந்தனிடம் மகிந்த ராஜபக்ச முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு செவ்வி அளித்துள்ள இரா.சம்பந்தன்,
”கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில், அவரைச் சந்தித்திருந்தேன். இதன்போது, புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
நீண்டகாலமாக நீடித்திருக்கும் பல பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வு காண முடியும் என்றும் அவரிடம் கூறினேன்.
ஒரு தலைவராக அவர் மக்களை வழி நடத்த வேண்டும். இதுபற்றி தாம் ஆலோசிப்பதாக என்னிடம் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.