சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியேற்பு
சிறிலங்காவின் 21 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும், இன்று பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் நியமித்திருந்தார்.
இந்தநிலையில் அவர் இன்று சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதையடுத்து அவருக்கு கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
அதேவேளை, சிறிலங்கா கடற்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இன்று பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
2005ஆம் ஆண்டுக்குப் பின்னர், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.