ஓய்வுபெற அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபருக்கு ஜெனரல் கிரிசாந்த டி சில்வா கடிதம்
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, தமது பதவியில் இருந்து ஓய்வு பெற அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு வரும் ஓகஸ்ட் 21ஆம் நாளுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையிலேயே அவர் தம்மை ஓய்வுபெற அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, இராணுவத் தளபதியாக இருந்த போது, ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தமக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு வழங்குமாறும் அல்லது, இராஜதந்திரப் பதவி ஒன்றை வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டதை அடுத்து, அவர் ஓய்வுபெற விருப்பம் வெளியிட்டுள்ளார்.
ஜெனரல் கிரிசாந்த டி சில்வா ஓய்வு பெற்றால், தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.