கைவிடப்படுகிறது 20 ஆவது திருத்தச்சட்டம் – நொவம்பரில் 3 மாகாணசபைகளுக்கு தேர்தல்
சிறிலங்கா அரசாங்கத்தினால் அண்மையில வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு, கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்த 20 திருத்தச் சட்டவரைவு, வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. வரும் 22ஆம் நாள் இந்த சட்டவரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், இதற்கு கூட்டு எதிரணி, ஜேவிபி உள்ளிட்ட பல கட்சிகளும், சுதந்திர தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.
இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகவும், மகிந்த ராஜபக்ச எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும், அடுத்த மாதம் முடிவடையும், மூன்று மாகாணசபைகளுக்கும் உடனடியாகவே தேர்தலை நடத்துவது என்றும், முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை ஒரே நாளில் நடத்தும் வகையில் கொண்டு வரப்படவிருந்த இந்த திருத்தச்சட்டத்தை அமைச்சரவை மீளப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், மூன்று மாகாணசபைகளுக்குமாறு தேர்தலுக்கு ஒக்ரோபர் 3ஆம் நாள் வேட்புமனுக் கோரப்படும். நொவம்பரில் தேர்தல் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.