மேலும் 6 மாத சேவை நீடிப்பைக் கோருகிறார் சிறிலங்கா கடற்படைத் தளபதி
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மேலும் ஆறு மாத சேவை நீடிப்பை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன 55 வயதை எட்டியதையடுத்து, கடந்த பெப்ரவரி 22 ஆம் நாள் ஓய்வு பெறவிருந்தார். இதையடுத்து அவருக்கு சிறிலங்கா அதிபர் ஆறுமாத சேவை நீடிப்பை வழங்கியிருந்தார்.
இந்த சேவை நீடிப்பு வரும் ஓகஸ்ட் 22ஆம் நாளுடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையிலேயே மேலும் ஆறு மாதகால சேவை நீடிப்பைக் கோரியுள்ளார்.
வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு மீண்டும் ஆறு மாத கால சேவை நீடிப்பு அளிக்கப்பட்டால், றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா மற்றும் சிறிமேவன் விஜேசிங்க ஆகியோர் சிறிலங்கா கடற்படைத் தளபதி பதவியைப் பெறும் வாய்ப்பை, இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.