மேலும்

எல்லாவற்றுக்கும் புலிகள் மீது பழி போட முடியாது- சிறிலங்கா இராணுவத் தளபதி

Lieutenant General Mahesh Senanayakeவடக்கில் நடக்கும் எல்லா சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளைக் குற்றம்சாட்ட முடியாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

“வடக்கில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இல்லை என்று நிராகரிக்கவில்லை. அதேவேளை, எல்லா சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டவும் தயாரில்லை.

இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றவியல் சட்டத்துக்கும், நாட்டின் இராணுவச் சட்டத்துக்கும் கட்டுப்பட்டவர். இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றமிழைத்தால், இந்த இரண்டு சட்டங்களின் கீழேயும் தண்டிக்கப்படுவார்.

எந்தவொரு குற்றங்களையும் செய்திருந்தால் அல்லது அதற்கு துணை போயிருந்தால், உதவியிருந்தால் அதற்கான தண்டனையையும் அவர்கள் எதிர்பார்க்க வேண்டும்.

இராணுவத்தில் உள்ள கொலையாளிகளுக்கு நான் பாதுகாப்பு அளிக்கமாட்டேன். குற்றவாளிகள் போர் வீரர்கள் என்ற போர்வைக்குள் இருந்து இராணுவத்தின் பெயரைக் கெடுப்பதற்கு அனுமதிக்க முடியாது.

போரின் போது, அல்லது அதற்குப் பின்னர் யாராவது இராணுவ சீருடையைப் பயன்படுத்தி குற்றமிழைத்திருந்தால் அவர் ஒரு போர் வீரர் அல்ல. போரில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள்.

குற்றமிழைத்தவர்களுக்கு போர் வீரர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டுக்காகப் பணியாற்ற இராணுவத்தினர் தயாராக இருக்க வேண்டும். நீர்ப்பாசன அல்லது கட்டுமானம் உள்ளிட்ட எந்தவொரு பொது வேலைகளிலும் அவர்கள் பணியாற்ற வேண்டும். ” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *