3 நாடுகளுக்கான தூதுவர்கள் திருப்பி அழைப்பு – வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அதிரடி
வினைத்திறனுடன் செயற்படவில்லை என்பதால், மூன்று நாடுகளுக்கான தூதுவர்களை சிறிலங்கா அரசாங்கம் கொழும்புக்குத் திருப்பி அழைத்துள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் திருப்பி அழைக்கப்பட்டுள்ளனரா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதிலளித்த போதே, மூன்று நாடுகளில் பணியாற்றிய சிறிலங்கா தூதுவர்கள் போதிய வினைத்திறனுடன் செயற்படவி்ல்லை என்பதற்காக திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
எனினும், திருப்பி அழைக்கப்பட்ட தூதுவர்கள் யார் என்ற விபரங்களை அவர் வெளியிட மறுத்து விட்டார்.
“தூதரகங்கள் சிறப்பாகச் செயற்பட வேண்டும். வினைத்திறன் அற்றவர்கள் இராஜதந்திரப் பதவிகளில் இருந்து, பொதுமக்களின் பணத்தில் நேரத்தை செலவிடுவதற்கு அனுமதிக்க முடியாது.
வெளிநாட்டு முதலீட்டை கவரும் வகையில், வர்த்தக இராஜதந்திரத்தை ஊக்குவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது குறித்துக் கலந்துரையாடுவதற்காக சிறிலங்காவில் உள்ள தூதுவர்கள், துணைத் தூதுவர்களை செப்ரெம்பர் 4ஆம் நாள் சிறிலங்கா அதிபரும், பிரதமரும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
வெளிநாடுகளில் சிறிலங்காவுக்கு 63 தூதரகங்கள் உள்ளன. தேவைப்பட்டால் அவை தரமுயர்த்தப்படும். சில தூதரகங்கள் மூடப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.