படகில் வந்த 20 அகதிகளை கொழும்புக்குத் திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா
கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 20 அகதிகள் வாடகை விமானம் ஒன்றின் மூலம் இன்று காலை கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தி ஒஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த வாரத்தில் அவுஸ்ரேலிய எல்லைக்காவல் படையினரால், அகதிகள் படகு ஒன்று இடைமறிக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகங்கள் எழுந்துள்ளன.
இன்று அதிகாலையில், அவுஸ்ரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைக் காவல் திணைக்களத்தினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் ஒன்றில், 20 பேர்- பாதுகாவலர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை, கடற்படையின் இரண்டு படகுகள், சிறிய படகு ஒன்றுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்ததை கிறிஸ்மஸ் தீவு மக்கள் கண்டிருந்தனர்.
இதனால், சிறிலங்காவில் இருந்து அகதிகள் படகு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனினும், புதிய படகு ஏதேனும் இடைமறிக்கப்பட்டதா என்பதை, அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் பீற்றர் டற்றனின் பேச்சாளர் உறுதிப்படுத்த மறுத்து விட்டார்.
கடைசியாக கடந்த மார்ச் மாதம், அகதிகள் படகு ஒன்றை அவுஸ்ரேலியா இடைமறித்திருந்தது.
அதில் வந்த 25 அகதிகள் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று அவுஸ்ரேலியா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.