வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா பதவி விலகினார் – நெருக்கடி தணிகிறது
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இன்று மாலை பதவியில் இருந்து விலகும் கடிதத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்துள்ளார்.
இன்று மாலை 5.30 மணியளவில் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்த கல்வி அமைச்சர் குருகுலராசா, பதவி விலகல் கடிதத்தை நேரில் கையளித்தார்.
கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில் உரையாற்றி முதலமைச்சர் விக்னேஸ்வரன், விசாரணைக்குழுவினால் குற்றம்சாட்டப்பட்ட கல்வி அமைச்சர் குருகுலராசாவையும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசனையும் தாமகவே முன்வந்து தமது பதவிகளைத் தியாகம் செய்யுமாறு கோரியிருந்தார்.
இதற்கமைய, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஏற்கனவே தமது பதவியை விட்டு விலகியிருந்தார். எனினும், கல்வி அமைச்சர் குருகுலராசா தமது பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவில்லை.
முதலமைச்சருக்கு எதிரான நகர்வுகளை கைவிட தமிழ் அரசுக் கட்சியினர் முடிவு செய்துள்ள நிலையில் இன்று அவர் தமது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன், இதுகுறித்து மேல் விசாரணைகளை நடத்தி, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க தமக்கு வாய்ப்பளிக்குமாறும் குருகுலராசா கோரியுள்ளார்.