தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர் பிரித்தானிய தேர்தலில் தோல்வி
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருந்த ஜேம்ஸ் பெரி தோல்வியடைந்துள்ளார். கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் இவர், கிங்ஸ்டன் அன் சேர்பிடன் தொகுதியில் தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.
லிபரல் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சேர் எட் டேவியிடம் ஜேம்ஸ் பெரி 4,124 வாக்குகளால் தோல்வியடைந்தார்.
சேர் எட் டேவி 1997ஆம் ஆண்டு தொடக்கம், 2015ஆம் ஆண்டு வரை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் இருந்தவர்.
அப்போது சிறிலங்கா அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து வந்தவர். குறிப்பாக மனித உரிமைகள் பதிவுகள் மற்றும் தமிழ் மக்களை நடத்தும் விதம் குறித்து இவர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான கடுமையான கருத்துக்களை முன்வைத்து வந்தார்.
2015 தேர்தலில், இவர், கொன்சர்வேட்டிவ் கட்சியின் ஜேம்ஸ் பெரியிடம் தோல்வியடைந்தார். எனினும், இம்முறை , ஜேம்ஸ் பெரியைத் தோற்கடித்து சேர் எட் டேவி மீண்டும் வெற்றியைப் பெற்றுள்ளார்.