சிறிலங்கா இராணுவத்தின் பட்டியலை நிராகரித்த ஐ.நா – 400 பேரில் 40 பேருக்கே மாலி செல்ல அனுமதி
மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட 400 சிறிலங்கா படையினரில் 40 பேருக்கு மாத்திரமே ஐ.நா அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனையவர்கள், இறுதிக்கட்டப்போரில் பங்கேற்றவர்கள் என்ற அடிப்படையில் ஐ.நாவினால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக 212 சிறிலங்கா படையினரை, கவசவாகனங்கள் மற்றும் ஆயுதங்களுடன் தருமாறு ஐ.நா கோரியிருந்தது.
இதற்காகத் தெரிவு செய்யப்பட்ட 400 சிறிலங்கா படையினரைக் கொண்ட பட்டியல் ஐ.நாவுக்கு அனுப்பப்பட்டது.
இதில் 40 பேரை மட்டுமே ஐ.நா அங்கீகரித்துள்ளது. ஏனையவர்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் காலத்தில், இறுதிக்கட்டப் போரில் பங்கேற்றவர்கள் என்ற அடிப்படையில், நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
மாலியில் சிறிலங்கா படையினருக்கான கட்டளை அதிகாரியாக பணியாற்றத் தெரிவு செய்யப்பட்ட கேணல் சமந்த விக்கிரமசேனவின் பெயரும் ஐ.நாவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்கள், வாகனங்களுடன் சிறிலங்கா படையினர் தர நியமனங்களுக்கேற்ப உள்ளனரா என்பதை, ஆய்வு செய்ய ஐ.நா குழுவொன்று வரும் 20ஆம் நாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.