மேலும்

சீனாவின் திட்டத்தில் இணைந்ததற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை- ரவி கருணாநாயக்க

ravi-modiசீனாவின் பாதை மற்றும் அணை திட்டத்தில் சிறிலங்கா இணைந்து கொண்டமை குறித்து, இந்தியா கவலை தெரிவிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக புதுடெல்லி வந்திருந்த அவர் தனது பயணத்தின் முடிவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போதே இவ்வாறு கூறினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்டோருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“சீன முதலீடுகளின் மூலம் 3000 தொடக்கம் 5000 ஆண்டுகள் பழைமையான கப்பல் பாதை சிறிலங்காவில் புத்துயிர் பெற்றுள்ளது.

பிராந்திய வர்த்தகம் முன்னோக்கி நகர வேண்டும். ஒரு நாடு ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, அது மற்றொரு நாட்டுக்கு எதிரானது அல்ல.

சீனாவுக்கு ஹொங்கொங் ஒரு ஆரம்பத் தளமாக இருந்தது போல, இந்தியாவின் பொருளாதார  செயற்பாடுகளுக்கான கேந்திரமாக சிறிலங்கா மாறலாம்.

சீனாவைப் போலவே, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து முதலீடுகளை சிறிலங்கா வரவேற்கிறது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தில் இந்தியாவின் முதலீடுகளை வரவேற்கிறோம்.

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு புதிய கொள்கலன் முனையங்கள் கட்டப்படவுள்ளன. இந்த திட்டத்தில் இரண்டு இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்புகள் ஆர்வம் கொண்டுள்ளன.

சீனாவின் அணை மற்றும் பாதை திட்டத்தில் சிறிலங்காவின் ஈடுபாடு குறித்து, எனது புதுடெல்லி பயணத்தின் போது, இந்திய அரசாங்கம் கவலை எதையும் எழுப்பவில்லை.

இந்திய அரசாங்கம் இதுகுறித்து முன்னர் கவலை தெரிவித்தது. இதனை சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் கவனத்தில் எடுத்து முடிவு செய்திருந்தனர். இப்போது  தமது முடிவை மீளாய்வு செய்வதாக இந்தியா என்னிடம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா ஒரு சிறிய நாடு. நாம் எவரையும் பகைமையுடன் பார்க்கவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கொள்கையையே கடைப்பிடிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *