நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலருக்கு விளக்கமளித்தார் சிறிலங்கா பிரதமர்
ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை சந்தித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஜூன் 5ஆம் நாள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது உண்மை, நீதி, இழப்பீடு, மீள நிகழாமையை உறுதிப்படுத்தல், ஆகிய நான்கு தூண்களின் அடிப்படையில் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து ஐ.நா பொதுச்செயலருக்கு விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் சட்ட மற்றும் ஏனைய நல்லிணக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஐ.நா பொதுச்செயலருக்கு சிறிலங்கா பிரதமர் விபரித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ஸ்டீபன் ஓ பிரையனும் பங்கேற்றார்.