ஐங்கரநேசன், குருகுலராசா பதவி விலக வேண்டும் – விசாரணைக்குழு அறிக்கையில் பரிந்துரை
வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சர் குருகுலராசாவும், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும், பதவியில் இருந்து விலக வேண்டும் என்று, வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.
வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை நியமித்திருந்தார்.
இந்தக் குழு கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் பணியை ஆரம்பித்தது. அதன் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 19ஆம் நாள் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த விசாரணை அறிக்கை 82 பக்கங்களைக் கொண்டுள்ளது. இது முழுமையாகத் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணை, விதிமுறை, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், கண்டறிவுகள், பரிந்துரைகள் அல்லது விதப்புரைகள், நன்றியுரை என்ற கட்டமைப்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையிலேயே, கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரை பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை நடைபெற இருக்கும் வடக்கு மாகாண சபை அமர்வில் இந்த அறிக்கை முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி மூலம் – உதயன்