வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி உதவிகளை வழங்கினார் சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட மக்களை நேரில் பார்வையிட்டு உதவிகளை வழங்கினர்.
அண்மையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்துக்கு இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பயணம் மேற்கொண்டனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு நிவாரண உதவிப் பொருட்களையும் வழங்கினர்.
ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டிருப்பதை விட, எதிர்காலத்தில் இதுபோன்ற அனர்த்தங்கள் ஏற்படாமல் தடுப்பதே முக்கியமானது என்று இதன்போது, இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்திருந்தனர். அமைச்சர் ஜோன் செனிவிரத்னவும், இந்தச் சந்திப்புகளில் பங்கேற்றிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தெற்கில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவோ உதவிகளை வழங்கவோ தவறி விட்டதாக கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இரண்டு நாட்களுக்கு முன்னதாக குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.