அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் – சீன நிறுவனத்துடன் மீண்டும் நாளை பேச்சு ஆரம்பம்
அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு தொடர்பாக, சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன், சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் நாளை பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளது.
அமைச்சரவை மாற்றத்தை அடுத்து, துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மகிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நாளை சீன நிறுவனத்துடன் முதலாவது சந்திப்பை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது துறைக்குள் இந்த விவகாரம் இருப்பதால் தாமே நேரடியாகப் பேச்சுக்களை நடத்தவிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் வேறு எவரையும் நுழைவதற்கு தாம் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பலர் இந்தப் பேச்சுக்களில் ஈடுபட்டதால் தான் இறுதியான இணக்கப்பாடு ஒன்றை எட்டும் முயற்சிகள் முடங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் விவகாரம் தொடர்பாக, அமைச்சர்கள் மலிக் சமரவிக்கிரம மற்றும், சரத் அமுனுகம ஆகியோர் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.
அத்துடன் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சராக இருந்த அர்ஜூன ரணதுங்கவும் தனியாகப் பேச்சு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான பேச்சுக்களின் தற்போதைய நிலை தொடர்பாக முன்னர் பேச்சுக்களை நடத்திய அமைச்சர்களுடன்,கலந்தாலோசித்திருப்பதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.