கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை வெளிப்படுத்தக் கோரி பாரிய போராட்டம்
கடத்தப்பட்டும், படையினரிடம் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் முன்பாக, கடத்தப்பட்டும், படையினரிடம் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலையை வெளிப்படுத்தக் கோரி நடத்தப்பட்டு போராட்டம் இன்று 100 ஆவது நாளை எட்டியுள்ளது.
இந்த நிலையில், இன்று சர்வமதப் பிரார்த்தனையுடன் கூடிய கவனயீர்ப்பு நிகழ்வாக இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஆயிரத்துக்கும் அதிகமானோர், போராட்டம் நடக்கும் இடத்தில் ஒன்று கூடியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏ-9 வீதியை தடை செய்துள்ளனர். இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அதேவேளை, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவானோர் ஒன்று கூடியுள்ளதால் சிறிலங்கா காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கிளிநொச்சி நீதிமன்றில் சிறிலங்கா காவல்துறையினர் சமர்ப்பித்த அறிக்கைக்கு அமைய, அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறும் பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கிளி்நொச்சி நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
இன்றைய போராட்டத்தில் இந்து, கத்தோலிக்க மதகுருக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.