சிறிலங்காவுக்கு 800 மில்லியன் டொலரை வழங்குகிறது ஆசிய அபிவிருத்தி வங்கி
சிறிலங்காவுக்கு இந்த ஆண்டில் 800 மில்லியன் டொலர் கடன்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி சிறிலங்காவுக்கு ஆண்டு தோறும் 400 மில்லியன் டொலர் கடனை வழங்கி வந்தது. இந்த ஆண்டில், இந்தக் கடன்தொகை 800 மில்லியன் டொலர்களாக- இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
இதுவே சிறிலங்காவுக்கு நாம் வழங்கும் அதிகபட்ச கடன்தொகையாகும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களப் பணிப்பாளர் ஹுன் கிம் தெரிவித்தார்.
ஜப்பானின் யொகஹாமா நகரில் நடந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் 50 ஆவது ஆண்டுக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“தெற்காசியப் பிராந்தியத்தில் உயர்தர உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நாடாக சிறிலங்கா நல்லலொரு உதாரணமாக திகழ்கிறது.
ஏற்கனலே சிறிலங்கா தரமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. தற்போது அதற்கு முன்னேற்றகரமான உட்கட்டமைப்பு வசதிகளே தேவையாக உள்ளது.
அது நாட்டின் பொருளாதாரத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை அதிக வேகத்துடன் முன்னெடுக்கும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.