நீல நிறத்துக்கு மாறுகிறது சிறிலங்கா காவல்துறை சீருடை
சிறிலங்கா காவல்துறை சீருடையை நீல நிறத்துக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
‘சிறிலங்கா காவல்துறையினரின் தற்போதைய “காக்கி” சீருடைக்குப் பதிலாக நீல நிற சீருடையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
உலகின் பல்வேறு நாடுகளில் காவல்துறை சீருடை நீல நிறத்திலேயே இருக்கிறது.
அந்த வகையில் சிறிலங்கா காவல்துறையின் சீருடையும் நீல நிறத்துக்கு மாற்றப்படும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கால் நூற்றாண்டுக்கு முன்னர், விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழீழ காவல்துறையினரின் சீருடை நீல நிறத்திலேயே இருந்தது.
1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த தமிழர் தாயகப் பகுதிகளில், சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக தமிழீழ காவல்துறையை உருவாக்கியிருந்தனர். 2009 மே மாதம் வரை தமிழீழக் காவல்துறை இயங்கியமை குறிப்பிடத்தக்கது.