கொழும்பில் ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார் மோடி
சிறிலங்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைப்பார் என்று சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தமாதம் சிறிலங்காவில் நடைபெறும் ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதை உறுதி செய்திருப்பதாக சிறிலங்காவின் புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட அவர், ’14 ஆவது ஐ.நா வெசாக் கொண்டாட்டங்கள் வரும் மே 12ஆம் நாள் ஆரம்பமாகி 14ஆம் நாள் வரை இடம்பெறும்.
தொடக்க நிகழ்வு கொழும்பு பண்டாநாயக்க ஞாபகார்த்த மண்டபத்திலும் நிறைவு நிகழ்வு கண்டியிலும் இடம்பெறவுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களை தொடக்கி வைப்பார். கண்டியில் நடக்கும் நிகழ்வில் நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி கலந்து கொள்வார்.
சிறிலங்காவில் நடக்கும் 14 ஆவது ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு 85 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் 72 நாடுகள் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளன.” என்று தெரிவித்தார்.
2004ஆம் ஆண்டு தொடக்கம் ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தக் கொண்டாட்டங்கள், 11 தடவைகள் தாய்லாந்திலும், 2 தடவைகள் வியட்னாமிலும் கொண்டாடப்பட்ட நிலையில் இம்முறை சிறிலங்காவில் கொண்டாடப்படவுள்ளன.